பதுளையில் பாணுக்குள் மறைத்து விற்கப்பட்ட போதைப்பொருள் மாத்திரை!
பதுளையில் சகுவாரோ எனப்படும் உடல் எடையை குறைக்கும் போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உணவுப் பொருட்களில் மறைத்து விற்பனை செய்யும் மருந்துக் கடை ஒன்று தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, பதுளை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் அதனைச் சுற்றிவளைத்து 1793 மாத்திரைகளுடன் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.
பதுளை மாவட்டம் மஹியங்கனை வீதியில் இயங்கிவரும் மருந்துக் கடை ஒன்றில் பாணில் 88 மாத்திரைகளும் விற்பனைக்காக தனித்தனியாக 1705 மாத்திரைகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பதுளை பிராந்திய சுகாதார சேவை அலுவலக உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களிடம் இந்த போதைப்பொருள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.