தைப்பூச தினத்தை முன்னிட்டு நல்லூர் கந்தனின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு
நாளையதினம் முகப்பெருமானுக்கு உகந்த தைப்பூசதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தைப்பூச தினத்தை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று(10) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில், ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்குச் செல்வார்கள்.
வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் முருகனுக்கு படையல் வைத்து விசேட பூசைகள் செய்வது வழக்கம் ஆகும்.
இந்நிலையில் இம்முறையும் இடம்பெற்ற படையல் பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்படும். அதேவேளை இவ்வழிபாட்டு முறை நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மரபாக பண்பாட்டு விழாவாக பேணப்பட்டு வருகிறது.
மேலும் நல்லூர் கந்தனின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு 291ஆவது ஆண்டாக இந்தவருடம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.