ஐரோப்பா செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண இளைஞர்; 8 மில்லியன் ரூபாய் நிதி மோசடி
யாழ்ப்பாணம் ஆரியகுளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கடத்தி, 8 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்த வழக்கில், ஒரு பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, குறித்த இளைஞன் வேலைக்காக ஐரோப்பா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் பெண் ஒருவர் இளைஞரை அணுகி, ரூ.8 மில்லியன் கொடுத்தால் இரண்டு வாரங்களுக்குள் அவனை அழைத்துச் செல்வதாக உறுதியளித்துள்ளார்.
இளைஞர் கடத்தல்
சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண், மேலும் மூன்று பேருடன் சேர்ந்து, ஒரு வாகனத்தில் அந்த இளைஞரின் வீட்டிற்கு வந்து, அவரைக் கடத்திச் சென்று, அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
பின்னர் சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவரை கோப்பாயில் உள்ள ஒரு வெறிச்சோடிய பகுதியில் கைவிட்டுச் சென்றனர்.
சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணையைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.