நாகை - இலங்கை பயணிகள் கப்பல்; பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் சேவையில், மேலதிக பயணப்பொதியினை எடுத்த செல்ல இந்திய மத்திய அரசு மற்றும், தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாகப்பட்டினம் - யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையே சுபம் நிறுவனம் சிவகங்கை என்ற பெயரில் கப்பல் போக்குவரத்தை தொடங்கியது.
நேற்று (16) 100வது நாளை முன்னிட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு புறப்பட்ட கப்பலில் 85 பயணிகள் பயணம் செய்தனர். இரு நாட்டு பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினர்.
22 கிலோ வரை மேலதிகமாக பயணப்பொதி
கப்பல் புறப்படுவதற்கு முன்பு துறைமுக அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் கப்பலை இயக்கும் சுபம் நிறுவன குழுமத்தினருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொடியசைத்து வைத்து சிவகங்கை கப்பலை வழி அனுப்பி வைத்தனர்.
விமான கட்டணத்தை விட கப்பல் கட்டணம் குறைவாக இருப்பதால் கப்பலில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேவேளை ஏற்கனவே பயணிகள் 10 கிலோ வரை பயணப்பொதியை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
தற்போது 22 கிலோ வரை மேலதிகமாக பயணப்பொதியை எடுத்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இந்திய மத்திய அரசு மற்றும், தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளன.
இதனால் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என சுபம் கப்பல் நிறுவனத்தினர் கூறினர்.
அதேவேளை பயணிகளுக்கு பாதுகாப்பு நிறைவாக உள்ள வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது பயணிகளுக்கு புதுவித அனுபவத்தை இந்த பயணம் அள்ளித்தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.