வாய்த்தர்க்கம்; கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்ல கலேவத்தை, பாலாறு பகுதியில் நேற்று (22) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில், மில்ல கலேவத்தை, பிபில வீதி, மொனராகலை எனும் முகவரியைச் சேர்ந்த உலகநாதன் திலீப் மதுஷங்க எனும் 28 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த கொலை சம்பவத்திற்குக் காரணம் என பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, தாக்குதலில் காயமடைந்த நபர் மொனராகலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் பலத்த காயமடைந்த நிலையில், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தச் சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.