கிளிநொச்சியில் கொலை சம்பவம்: அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கிய சந்தேகநபர்!
கிளிநொச்சியில் தன்னை வாளால் வெட்டிக் காயப்படுத்தியவர்கள் மீதே வாகனத்தால் மோதி கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (28-03-2023) பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திரபுரம் பகுதியில் ஏ - 9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த விபத்தில் முகமாலையைச் சேர்ந்த 28 வயதான திருபராஜ் என்பவரே விபத்தில் உயிரிழந்தார்.
இவ்வாறான நிலையில், விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபர் உடலில் வெட்டுக்காயங்களுடன் பளை நிலையத்தில் சரணடைந்தார்.
சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்,
"விபத்துச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்பதாக எனது வீட்டுக்கு மதுபோதையில் வந்த 3 பேர் என்னுடன் தகராறில் ஈடுபட்டு என்னை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
காயமடைந்த நான் எனது வாகனத்தைச் செலுத்தி மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தபோது ஏ - 9 வீதியில் என்னைத் தாக்கிய மூவரும் நின்றதை அவதானித்தேன்.
வாகனத்தை மறிக்க முற்பட்ட போது அவர்களை மோதித்தள்ளி விட்டு நிற்காது சென்றுவிட்டேன் " என சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சந்தேகநபர் வெட்டுக்காயங்களுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலி ஸார் தெரிவித்தனர்.