கொழும்பில் பல வீடுகளை உடைத்து கொள்ளை; காட்டிக்கொடுத்த வங்கிக் கணக்கு!
கொழும்பில் பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்டவர் 16 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட நபரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து கொள்ளையிட்ட தங்க நகைகளை 5 அடகு பற்றுச்சீட்டுகள், 6 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வங்கிக் கணக்கில் பெருந்தொகையான பணம்
நபர் ஒருவர், பெருமளவில் போதைப்பொருளைக் கொள்வனவு செய்வதாகவும் அவரது வங்கிக் கணக்கில் பெருந்தொகையான பணம் இருப்பதாகவும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒருகொடவத்தை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து ஹங்வெல்ல கிராண்ட்பாஸ் மற்றும் கடுவலை பகுதிகளில் உள்ள தனியார் அடகு மையங்களில் அடகு வைக்கப்பட்ட 7 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகளுக்கான 5 அடகு பற்றுச்சீட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
மேலதிக விசாரணைகளின் போது, கொஸ்கம பகுதியில் ஏழு வீடுகளை உடைத்துத் திருடிய நகைகளே இவை என்பது கண்டறியப்பட்டது. களவாடிய நகைகளை அடகு வைத்து சுமார் 18 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைப் சந்தேகநபர் பெற்றுள்ளார்.
அதில் 16 லட்சம் ரூபாயை வங்கியில் வைப்பிலிட்டுள்ளதுடன் , ஏனைய பணத்தைப் போதைப்பொருள் பாவனைக்காகச் செலவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.