முல்லைத்தீவில் மாணவன் ஒருவரை புலமைப்பரிசில் பரீட்சை எழுத விடாமல் தடுத்த பாடசாலை நிர்வாகம்!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கோம்பாவில் பாடசாலையில் தரம் 5 இல் கல்விகற்று வந்த பாடசாலை மாணவன் ஒருவன் வயிற்றில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட காரணத்தினால் இரு மாதங்கள் பாடசாலை செல்லாததால் குறித்த மாணவனை புலப்பரீட்சை எழுதவிடாது பாடசாலை சமூகம் தடுத்துள்ளது.
இது தொடர்பில் மாணவனின் பொற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் கூலிவேலைசெய்து தங்கள் குடும்பத்தினை கொண்டு செல்லும் குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான தரம் 5 இல் கல்விகற்ற மாணவனுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அவனது அக்காவான சகோதரி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 163 புள்ளி பெற்று சித்தியடைந்து கல்வி கற்று வருகின்றார்.
இவ்வாறான நிலையில், குறித்த மாணவனை புலமைப்பரிசில் பரீட்சைக்காக பெற்றோர்கள் தயார் படுத்தியுள்ளார்கள்.
இதன்போது குறித்த மாணவனுக்கு வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக வயிற்று பகுதியில் பாரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் குறித்த மாணவன் 2 மாதங்கள் பாடசாலை செல்லவில்லை அதற்கான மருத்துவ அறிக்கையினையும் பெற்றோர்கள் காட்டியுள்ளார்கள்.
இந்நிலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான நாள் கடந்த 15.10.2023 அன்று நெருக்கி வந்த வேளை பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பெற்றோரை அழைத்து குறித்த மாணவனை பரீட்சை எழுத அனுமதிக்கமுடியாது என்று தெரிவித்துள்ளர்.
இது குறித்து பாடசாலை அதிபரிடமும் பெற்றோர்கள் முறையிட்ட போது மாணவன் 70 புள்ளிகளுக்கு கீழ்த்தான் பரீட்சைகளில் புள்ளி எடுக்கின்றார்.
இது போதாது புலமைப்பரிசில் பரீட்சை முக்கியமில்லை அதனால் பிரச்சினை இல்லை பிறகு படிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், பாடசாலை நிர்வாகம் பெற்றோரிடம் கடிதம் ஒன்றினை எழுதி கையெழுத்தும் வாக்கியுள்ளனர்.
பாடசாலை நிர்வாகம் தங்கள் பரீட்சை விகிதத்தினை சிறப்பாக காட்டவேண்டும் என்பதற்காகவும் படிப்பித்த ஆசிரியர் தான் படிப்பித்த பிள்ளைகள் அனைவரும் சித்தியடைந்துள்ளனர் என பெருமை பேசவும் உடல் உபாதை காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவனை பரீட்சை எழுதவிடாமல் தடுத்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, குறித்த மாணவன் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பாடசாலை போவதற்கு விருப்பம் அற்ற நிலையில் பரீட்சை எழுதாதது அவனது பெரிய ஒரு ஆசையினை தடுத்துள்ளதை போன்று காணப்படுவதாகவும் அவனுக்கு மனக்கவலையாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் யாரிடமும் முறையிட முடியாத நிலையில் குறித்த குடும்பம் இவ்வளவு காலமும் இருந்து வந்துள்ள நிலையில் ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இவ் விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு செய்துள்ளனர்.


