முல்லைத்தீவு சிறுமி மரணம்; வைத்தியசாலையை முற்றுகையிட்டு போராட்டம்
முல்லைத்தீவு சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி இன்று (29) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார்.

சிறுமியின் மரணம் தொடர்பில் கேள்வி....
இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி இன்று (29) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நுழைவாயிலை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வைத்தியசாலை பணிப்பாளரை அங்கு வரவழைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரணம் தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன், குறித்த மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தனர்.
சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறும் இதன்போது மக்களால் மகஜர்களும் கைளிக்கப்பட்டன.
ஆர்ப்பட்டத்தில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினரிடம் மகஜர்களும் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது