மாவீரர் நாள் தடையுத்தரவை நீக்கிய முல்லைத்தீவு நீதிமன்றம்!
இறந்தவர்களை நினைவுகூருவது மானிட பண்பியல்பு என்கிற அடிப்படையில் மாவீரர் நினைவு நிகழ்விற்க்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மாற்றி அமைத்து முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தடையுத்தரவிற்கு எதிரான இன்று காலை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது " இறந்தவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு. தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராயினும், அவ் அமைப்பின் கொடிகள், அடையாளங்களை பிரதிநிதித்துவம் செய்யாது நினைவுகூரலாம் என நீதிபதி சுட்டிக்காட்டி தடை உத்தரவை மாற்றியமைத்து கட்டளையிட்டார்.
இந்த தடையுத்தரவுக்கு எதிரான நகர்த்தல் பத்திரத்தின்மீதான விசாரணையில் தடையுத்தரவை நீக்கக் கோரி சட்டத்தரணிகள் கேசவன் சயந்தன், வி.எஸ்.தனஞ்சயன், கணேஸ்வரன், ருசிகா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால், கடந்த 17ஆம் திகதி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.