மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் ! நடந்தது என்ன?
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நளீம் மீது இன்று (08) காலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வைத்து ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,
அரசியல் பிரச்சினைகள் காரணமாக பள்ளிவாசல் ஒன்றின் முன்பாகவைத்து எனது தந்தை, சகோதரர் மீது இன்று(8) அதிகாலை 6.00 மணியளவில் கலீல் என்பவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனால் காயமடைந்த சகோதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடவடிக்கை
காலையில் கொழும்பில் இருந்து வந்த நான் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் காதர் என்பவர் வைத்தியசாலையில் வைத்து என்னை தரக்குறைவான வார்தைகளால் பேசினார்.
இதனையடுத்து நான் பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாகனத்தைவிட்டு இறங்கி உள் சென்ற போது பின்னால் வந்த காதர் என்மீது மோட்டார் சைக்கிளின் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதுடன் பொலிஸ் நிலையத்துக்குள்ளும் தாக்க முற்பட்டார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் அப்படி ஒன்றும் நடக்கவில்லை இருவரும் மோதலில் ஈடுபட முயற்சித்தனர் என தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.