பற்றைக் காடுகளாக மாறும் மலையக தொடருந்து தண்டவாளங்கள்
டிட்வா சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக மலையக தொடருந்து மார்க்கத்திற்கு ஏற்பட்ட கடுமையான சேதத்தினால், பல இடங்களில் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் பராமரிப்பின்றி காணப்படும் தண்டவாளங்கள் தற்போது பற்றைக் காடுகளாக மாறி வருகின்றன. தற்போது அபேவெல - பதுளை மற்றும் நாவலப்பிட்டி - வட்டவளை ஆகிய பகுதிகளுக்கு இடையே தொடருந்து சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
ரம்புக்கணை முதல் நாவலப்பிட்டி வரையிலும், அபேவெல முதல் நானுஓயா வரையிலுமான தண்டவாள பகுதிகளில் தொடருந்து பொறியியலாளர்களும் தொழிலாளர்களும் தற்போது சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலையக பிரதான தொடருந்து பாதையிலான போக்குவரத்து 75 நாட்களுக்கும் மேலாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. இதனால் தொடருந்து மட்டுமே பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் கொண்ட கிராமங்களில் வாழும் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தமது அன்றாட வருமானத்தில் பெரும் பகுதியை போக்குவரத்துக்காகவே செலவிட வேண்டியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நானுஓயா முதல் அபேவெல வரையிலான தொடருந்து பாதை சீரமைக்கப்பட்ட பின்னர், நானுஓயாவில் தரித்து நிற்கும் தொடருந்து இயந்திரங்களை பயன்படுத்தி, நானுஓயா முதல் பதுளை வரையான தொடருந்து சேவைகளை முன்னெடுக்க முடியும் என நாவலப்பிட்டி கட்டுப்பாட்டு அறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.