கணவர் வெளிநாட்டில், இரு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு ; தீவிரமடையும் தேடுதல்
உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் காப்பாளர் குழுவின் உதவியுடன் தாய் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடும்ப தகராறு
மொரட்டுவையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான 40 வயதுடைய ஒரு பெண் தனது 4 வயது மற்றும் 8 வயதுடைய குழந்தைகளுடன் இன்று (02) காலை அனுராதபுரம் நகரத்திற்கு அருகிலுள்ள மல்வத்து ஓயாவில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மல்வத்து ஓயா அருகே நின்ற ஒருவர், குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து உள்ளூர்வாசிகளின் உதவியுடன், பெண்ணை மீட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் உயிர்காப்பாளர் பிரிவு இரண்டு குழந்தைகளையும் தேடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.