கடல் வழியாக கடத்தப்படவிருந்த கொசு விரட்டும் பத்தி பக்கெட்டுகள் பறிமுதல்
தனுஷ்கோடிக்கு அடுத்த சேரான் கோட்டை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 720 கொசு விரட்டும் பத்தி பக்கெட்டுகள் க்யூ பிரிவு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேரன்கோட்டை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பொருட்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கியூ பிரிவு காவல் ஆய்வாளர் ஜானகி தலைமையில் கியூ பிரிவு பொலிஸார் சேரான் கோட்டை கடற்கரை பகுதியை இன்று (2) அதிகாலை கண்காணித்தனர்.
அப்போது கோவை மாவட்டம் பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தில் 12 அட்டைப் பெட்டிகளில் இருந்த 720 கொசு விரட்டும் பத்தி பெட்டிகளுடன் வாகனத்தின் சாரதி உட்பட இருவர் இருந்தனர்.

அவர்கள் கியூ பிரிவு பொலிஸாரை கண்டதும் தப்பியோட முயன்றதால் பொலிஸார் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
விசாரணை செய்ததில் இலங்கைக்கு படகு மூலம் சட்டவிரோதமாக கடத்துவதற்காக 12 அட்டைப்பெட்டிகளில் கொசு விரட்டும் பத்திகளை கொண்டு வந்து கடற்கரை பகுதியில் பதுக்கி வைத்து, அரிச்சல் முனை அருகே கடலில் நிறுத்தி வைத்துள்ள பதிவு எண் இல்லாத படகு சேரான் கோட்டை கடற்கரை கொண்டு வந்து கொசு விரட்டும் பத்தி பண்டல்களை இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.
12 அட்டைப் பெட்டிகளில் இருந்த கொசு விரட்டும் பத்திகள், சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ராமேஸ்வரம் சுங்கத்துறையினரிடம் கியூ பிரிவு பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.