உக்ரனைவிட்டு வெளியேறிய 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர்; ஐ.நா தகவல்
உக்ரைன்-ரஷிய போருக்கு மத்தியில் 5,00,000க்கும் மேற்பட்ட மக்கள் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா.அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷிய தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் போர் பீதியால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 5 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐநா சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷிய தாக்குதலுக்குப் பிறகு 1,60,000 பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர்.
குறித்த போர் தீவிரமடையும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி உக்ரைனில் இருந்து வெளியேறுவோர், போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளில் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக போலந்து நாட்டு எல்லையில் 2,81,000,பேர் குவிந்துள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் நீண்ட வரிசையில் கார்கள் மற்றும் பேருந்துகள் அணிவகுத்து நிற்கின்றன. பலர் நடந்தே எல்லைகளை கடந்து வருகின்றனர்.