செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் எலும்புக்கூட்டுத் தொகுதிகள்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (03) புதிதாக 07 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வுப் பணிகள் கடந்த 29 ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று 10 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
231 எலும்புக்கூட்டுத் தொகுதிகள்
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியதை அடுத்து 42 ஆவது நாளாக இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 51 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 07 எலும்புக்கூட்டுத் தொகுதிகளுடன் இதுவரையில் 213 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் செம்மணி மனிதப் புதைகுழியில் 231 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.