இலங்கையில் வெளிநாட்டு பிரஜைக்கு பெண் தோழிகள் கொடுத்த அதிர்ச்சி!
வடக்கு களுத்துறைப் பகுதியில் வாடகை வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்த ஒரு பங்களாதேஷ் பிரஜையின் , பதினைந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணத்தை கூடவே தங்கியிருந்த நண்பரும் , அவரது பெண் தோழிகளும் திருடி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருடன் அதே வீட்டில் தங்கியிருந்த மற்றொரு வெளிநாட்டவரும், அவரது இரண்டு வெளிநாட்டுப் பெண் தோழிகளும் இணைந்து பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாகப் வடக்கு களுத்துறை பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

பணத்தைத் திருடிக்கொண்டு ஓட்டம்
திருடப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு 1,564,487 ரூபாயாகும். இதில் 13,000 இலங்கை ரூபாயும், 4,900 அமெரிக்க டொலர்களும் அடங்குவதாக முறைப்பாட்டாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வணிக நோக்கம் ஒன்றிற்காக, தனது வெளிநாட்டு நண்பர் ஒருவருடன் கடந்த மாதம் 6-ஆம் திகதி முறைப்பாட்டாளர் இலங்கைக்கு வருகை தந்தார். இந்நிலையில் அவர்கள் நாட்டிற்கு வந்த மூன்று நாட்களுக்குப் பின்னர், சந்தேகத்திற்குரிய அந்த நண்பரின் இரண்டு வெளிநாட்டுப் பெண் தோழிகளும் இலங்கைக்கு வந்தனர்.
தொடர்ந்து, 13-ஆம் திகதி முதல், அவர்கள் நால்வரும் வடக்கு களுத்துறை, கமுனு மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு ஒன்றாகத் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில் , 18-ஆம் திகதி பிற்பகல் முறைப்பாட்டாளர் உறக்கத்திலிருந்து எழுந்தபோது, அந்த வெளிநாட்டு நண்பரும் அவரது இரண்டு பெண் தோழிகளும் வீட்டில் இருக்கவில்லை.
அவர்களது தனிப்பட்ட உடைமைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருந்ததாகவும், தனது கைவசம் இருந்த அந்தப் பணக் கையிருப்பும் அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருந்ததாகவும் பங்களாதேஷ் பிரஜை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அவரது முறைபாட்டை அடுத்து , வடக்கு களுத்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.