விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பில் சர்ச்சையை கிளப்பும் பொன்சேகா
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் எங்களுக்கு சீனாவிலிருந்து தோட்டாக்கள் வழங்குவது நிறுத்தப்பட்ட பிறகு எங்களிடம் பீரங்கி தோட்டாக்கள் தீர்ந்துவிட்டது.
நிலைமை குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்தோம். அதற்கு அவர் சீனாவிலிருந்து தோட்டாக்களை கடனாகவே இறக்குமதி செய்கிறோம்.
எனவே அவர்கள் அவற்றை அனுப்பவில்லை என்றால் எங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்றார். அதன் பிறகு பசில் ராஜபக்ச உடன் கலந்துரையாடல்களுக்குப் பிறகு அவர் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு பீ.பி ஜயசுந்தரவுக்கு சொன்னார்.
ஒரு தேவையொன்று உள்ளது, உடனடியாக இராணுவத் தளபதிக்கு 100 மில்லியன் டொலரை வழங்குமாறு கூறினார். 5 நிமிடத்தில் அவர் அதனைச் செய்தார். அதன் பிறகு ஒரு மணி நேரம் வரையில் ஒரு நட்பு ரீதியான கலந்துரையாடல் பசிலுடன் இடம்பெற்றது.
2005 ஆம் ஆண்டில் வடக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு புலிகள் அமைப்பு பயன்படுத்தப்பட்டதாக பசில் ராஜபபக்ச ஒப்புக்கொண்டார்.
ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்கள் வாக்களிக்காமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்ததோடு அதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டுமென கேட்க கடற்புலிகள் பயன்படுத்தும் டோரா வகை படகுகளுக்காக மலேசியாவுக்கு பணம் வழங்க வேண்டுமெனவும் அதற்காக 2 மில்லியன் வழங்குமாறும் கோரியுள்ளனர்.
அதற்கமைய அந்த அமைப்புக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. அது வெளிநாடு ஒன்றில் வைத்து வழங்கப்பட்டது.
அதிலிருந்து தாக்குதல் படகுகள் வந்து எங்களை தாக்கின. ஏராளமான கடற்படை வீரர்கள் இறந்தனர், இவர்கள் செய்தது தேசதுரோக செயல் இல்லையா? மகிந்த ராஜபபக்சவின் மகன் கடற்படையில் பணியாற்றிய போதிலும் அவர் கடலுக்கு சென்று யுத்தம் புரியவில்லை என்றார்.
2019ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காலை ஊடகவியலாளர்கள் கூடியிருந்த நிலையில் சவேந்திர சில்வாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பேசியுள்ளார்.
இதன்போது, “வௌ்ளைக் கொட்டியுடன் சரணடைய நாள் முழுவதும் தமிழ் மக்கள் வருவதாகவும் மூன்றாம் தரப்பிடம் சரணடைவது சாத்தியமில்லை. எங்களிடம் தான் சரணடைய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்” என்று சவேந்திர சில்வா ஊடகவியலாளர்கள் இருப்பது அறியாது கூறினார்.
அப்போது அதை ஒரு ஊடகவியலாளர் காணொளியில் பதிவு செய்துள்ளார். அந்த ஊடகவியலாளரை கொல்வதற்கு இவர்கள் தேடித்திரிந்தனர்.
இதனையடுத்து அந்த ஊடகவியலாளர் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார். இப்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
குறித்த காணொளி என்னிடம் இருக்கிறது. 2019 மே 17ஆம் திகதி இரவு 9.30 மணிக்குதான் நான் சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்தேன்.
இறுதி போர் 17ஆம் திகதி அதிகாலை 2.30 மணிக்கு தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 17ஆம் திகதி காலை முதல் கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்ச, எரிக்சொல்ஹெயிம், ஐ.சி.ஆர்.சி, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியோருடன் நீண்ட காலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, வௌ்ளைக் கொடியுடன் சரணடைய வருபவர்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு அது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறான உண்மை கதைகள் பின்னரே தெரியவந்தது என குறிப்பிட்டுள்ளார்.