மத்திய கிழக்கு போர் நெருக்கடி ; எரிசக்தி பாதுகாப்பு குறித்து மோடி - அநுர அவசர உரையாடல்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் அதன் காரணமாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரிடையே நேற்று மாலை விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேற்காசியாவின் தற்போதைய பதற்றமான நிலைவரங்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.

இந்திய - இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்தும் முக்கிய திட்டங்களின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளிகள் என்ற ரீதியில், பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து செயற்படும் என உறுதிபூணப்பட்டது.
இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிடுகையில், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் மேற்காசிய நிலைவரங்கள் குறித்து ஆலோசித்தேன்.
எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் முக்கிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன" எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வருவதால், சர்வதேச சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்படலாம் மற்றும் விலையேற்றம் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இவ்வாறானதொரு உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையில் எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.