இஸ்ரேலில் காணாமல்போன இலங்கைப் பெண் உயிரிழந்திருக்கலாம்
இஸ்ரேல் - பலஸ்தீன மோதலில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த பெண் உயிரிழந்திருக்கலாமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் குறித்த பெண் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறதாகவும் அவர் கூறினார்.
இஸ்ரேலிற்கு தாதிப் பணிக்காக சென்ற பெண்
சம்பவத்தில் இரு குழந்தைகளின் தாயாகிய குறித்த பெண் 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவின் கீழ் வெளிநாட்டிற்கு பயணம் செய்துள்ளார்.
கம்பஹாவை சேர்ந்த 49 வயதான குறித்த பெண் இஸ்ரேலிற்கு தாதிப் பணிக்காக சென்றுள்ளார். இஸ்ரேலின் தற்போதைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, இராஜதந்திர தலையீட்டின் அடிப்படையில் பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர முயல்வதாக யாப்பா கூறினார்.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து காப்பீடு மற்றும் இழப்பீடு தொகையை வழங்குவதாகவும் அவர் கூறினார்.