எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறையும் சந்தர்ப்பங்களில், அதன் நன்மையை நிச்சயமாக நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், எரிபொருள் விலை தொடர்பான நிவாரணத்தை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது டீசலுக்கு 100 ரூபாவும், பெற்றோலுக்கு 20 ரூபாவும் மானியம் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். எனினும், இந்த மானியம் அனைவருக்கும் சமமாக கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், எரிபொருள் மானியங்களுக்காக அமைச்சரவையால் 57 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார். எரிபொருள் விலைகளில் எப்போது மாற்றம் மேற்கொள்ளப்படும் என்பதை தற்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது என தெரிவித்த அவர், உலக சந்தை விலை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டே அது தீர்மானிக்கப்படும் என்றார்.
கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் காரணமாகவே உள்நாட்டிலும் விலைகள் உயர்த்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்காலத்தில் உலக சந்தையில் விலைகள் குறைவடைந்தால் அதன் நன்மை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.