SLPP, UNP, SJB பலர் பாதாள உலகத்துடன் தொடர்பு; அம்பலப்படுத்திய அமைச்சரால் சபையில் சலசப்பு
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலக நடவடிக்கைகளுடன் நேரடி அரசியல் தொடர்புகளை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,தெரிவித்தார்.
அத்துடன் விசாரணைகளுக்குப் பிறகு அத்தகைய அரசியல்வாதிகளின் பெயர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் பாராளுமன்றத்தில், இன்று (20) தெரிவித்தார்.
பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு
புலனாய்வு அறிக்கைகளின்படி, இலங்கை பொதுஜன பெரமுன (SLPP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) ஆகியவற்றின் முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மற்றும் தற்போதைய மாகாண அரசியல்வாதிகள், 10 சக்திவாய்ந்த பாதாள உலகக் கும்பல்களுடன் நேரடி தொடர்புகளைப் பேணுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றினார்.
அதற்கு பதிலளிக்கும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாதாள உலகத்துடனான அரசியல் தொடர்புகள் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளதாக புலனாய்வு அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக அமைச்சர் கூறினார்.
அதேவேளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பதிலுக்கு, எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததனால் சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.