மத்திய கிழக்கு போர் தாக்கம் ; இலங்கைக்கு மீண்டும் 2022 போன்ற நெருக்கடி வராதா?
மேற்கு ஆசியாவில் (மத்திய கிழக்கு) நிலவும் போர் சூழல் இலங்கைப் பொருளாதாரத்தில் குறுகிய மற்றும் நீண்ட காலத் தாக்கங்களை ஏற்படுத்தினாலும் தற்போதைய நிதி ஸ்திரத்தன்மை காரணமாக 2022 ஆம் ஆண்டு போன்றதொரு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் துறைத் தலைவர் பேராசிரியர் வசந்த அத்துகோரள இது குறித்துத் தெரிவிக்கையில்,
2022 ஆம் ஆண்டை விட தற்போது இலங்கைப் பொருளாதாரம் வலுவாக உள்ளது. அப்போது எரிபொருள் இறக்குமதி செய்ய டொலர் இல்லை, ஆனால் இப்போது டொலர் கையிருப்பு உள்ளது.

விநியோகப் பாதைகள் முடங்கியுள்ளதே தற்போதைய பிரச்சினையாகும் எனத் தெரிவித்தார்.
டிட்வா சூறாவளி பாதிப்பு இருந்தபோதிலும், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் எட்டப்பட்ட 5 வீத பொருளாதார வளர்ச்சி வீதத்தைத் தொடர்ந்து பராமரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலத்தில் உற்பத்திப் பொருளாதாரம் வீழ்ச்சியடையலாம் மற்றும் வறுமை விகிதம் அதிகரிக்கலாம்.
எரிபொருள் சிக்கனத்திற்காக வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவது உற்பத்தி மற்றும் கல்வித்துறையைப் பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
எனினும் இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம் என பேராசிரியர் அத்துகோரள சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவசியமான குடிநீரை இலங்கை ஏற்றுமதி செய்ய முடியும். இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் தற்போது எரிசக்தி நுகர்வைச் சிறப்பாக முகாமைத்துவம் செய்து வருவதாகவும், இந்த முயற்சிகளின் வெற்றியே எதிர்காலப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.