மத்திய கிழக்கில் உக்கிரமடையும் போர் சூழல் ; சிக்கித்தவிக்கும் இலங்கை பெண் உள்ளிட்டவர்கள் தொடர்பில் முக்கிய தகவல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பல இலட்சக்கணக்கான இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அந்தந்த நாடுகளுக்கான இலங்கைத் தூதரகங்கள் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளன.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் பாரிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, பெய்ரூட் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருந்த 19 இலங்கையர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இலங்கைப் பெண்
வடக்கு இஸ்ரேல் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில், அங்கு வீட்டுப்பணிப் பெண்ணாகப் பணிபுரியும் கடவத்தையைச் சேர்ந்த 43 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் சிறிய அளவில் காயமடைந்துள்ளார்.
அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காயங்கள் பாரதூரமானவை அல்ல என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தங்கியிருந்த வீடு சேதமடைந்ததால், தற்போது அவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஈரான் நடத்திய தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை எனத் தூதுவர் அருஷா குரே தெரிவித்துள்ளார்.
அவசர உதவிகளுக்காக விசேட சேவை ஒன்று தூதரகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா சென்றுள்ள இலங்கையர்கள் தமது விமான நிறுவனங்கள் மற்றும் பயண முகவர்களுடன் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் தூதரகத்தின் முகநூல் (Facebook) பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படும்.
குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய போதிலும், அங்கிருக்கும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாகத் தூதுவர் லக்சித ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்துக்களோ ஏற்படவில்லை.குவைத் பாதுகாப்புப் பிரிவினருடன் தூதரகம் நேரடித் தொடர்பில் இருப்பதாகவும், உறவினர்கள் அநாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அந்தந்த நாட்டுத் தூதரகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.