உலக வங்கியின் முக்கியஸ்தர் ஜனாதிபதி ரணில் சந்திப்பு
உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்ட்டின் ரைசர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்றையதினம் திங்கட்கிழமை (17) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் மார்ட்டின் ரைசர் தனது டுவிட்டர் பதிவில், கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு தனியார் முதலீடுகளை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான சீர்திருத்தங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் மீட்சி குறித்து முக்கிய சந்திப்பு
எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு மிகவும் தீர்க்கமானவை என தெரிவித்துள்ள அவர், உலக வங்கி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் மீட்சி குறித்து தனியார் துறையினருடனும் மார்ட்டின் ரைசர் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புக்களை உருவாக்க உதவும் கொள்கைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட நிர்வாகம் ஆகியவை தனியார் துறை முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் தனியார் துறையினரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.