நீலிகா மலவிகேவிடம் மன்னிப்புக் கோரிய ஊடகத்துறை அமைச்சர்!
பேராசிரியர் நீலிகா மலவிகேவிடம் (Neelika Malavige) அனைத்து ஊடகங்களின் சார்பிலும் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) மன்னிப்புக்கோரியுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவது,
அண்மையில் தன்னால் கூறப்படாத கருத்தொன்றை ஊடகங்கள் திரிபுபடுத்தி வெளியிட்டிருப்பதன் காரணமாக மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியிருப்பதாக பேராசிரியர் நீலிகா மலவிகே கூறியிருந்த நிலையில், அதற்காக அவரிடம் அனைத்து ஊடகங்களின் சார்பிலும் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும மன்னிப்புக் கோரியிருக்கின்றார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயெதிர்ப்புப்பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவிகே அண்மையில் இணையவழிக் கலந்துரையாடலொன்றில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் பாடசாலைகளை மீளத்திறக்கவேண்டுமென தான் கூறவில்லை என்றும் 40 நிமிட இணையவழிக்கலந்துரையாடலில் ஒரு வசனத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு, பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடியவகையில் அதனை செய்தியாக வெளியிடுகின்ற ஊடங்களின் செயற்பாட்டினால் தான் பெரிதும் கவலையும் களைப்பும் அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டு பேராசிரியர் நீலிகா மலவிகே அவரது முகநூல் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.
இந்நிலையில் நீலிகா மலவிகேவின் பதிவை மேற்கோள்காட்டி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு மிகுந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், இலங்கைப் பிரஜைகளை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காகத் தனது அறிவையும் ஆலோசனைகளையும் முழுமையாக வழங்கி அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் ஓர் சமுதாயத்தலைவராக பேராசிரியர் நீலிகா மலவிகேவை குறிப்பிடமுடியும்.
அவ்வாறிருக்கையில் தற்போதைய சர்ச்சைக்குக் காரணமாகியிருக்கின்ற, கேற்வே சர்வதேச பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த இணையவழிக்கலந்துரையாடலை தனிப்பட்ட ரீதியில் நான் முழுமையாகக் கேட்டேன். அதன் காரணமாக நீலிகா மலவிகேவினால் கூறப்பட்ட கருத்தை ஊடகங்கள் திரிபுபடுத்தி வெளியிட்டமையினால் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்பையும் மனவேதனையையும் என்னால் நன்கு புரிந்துகொள்ளமுடிகின்றது.
அதனைப் புரிந்துகொள்ளக்கூடியவகையில் நாமனைவரும் மனிதாபிமானம் உடையவர்களாக இருக்கவேண்டும். ஆகையினால்நேற்று முன்தினம் அவரைத் தொடர்புகொண்டதுடன் அனைத்து ஊடகவியலாளர்கள் சார்பிலும் ஊடகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் அவரிடம் மன்னிப்புக்கோரினேன்.
எனவே இந்தத் தவறை பொறுப்புவாய்ந்த ஊடக செயற்பாட்டிற்கான ஆரம்பமாக மாற்றிக்கொள்ளுமாறு அனைத்து சகோதர ஊடகவியலாளர்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என்று பதிவிட்டுள்ளார்.