கல்முனை கடற்கரைகளில் குவிந்த பாரிய மீன்கள்!
திடீர் வானிலை மாற்றம் காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பாரிய மீன்கள் பிடிபடுகின்றதனால் மீனவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான பாரிய பாரை மீன்கள், வளையா மீன்கள் மற்றும் சுறா மீன்கள் என கரை வலைகள் மூலம் பிடிக்கப்பட்டு, பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டன.
அந்தவகையில் இன்றும் (23) இவ்வாறு சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் பாரை இன மீன்கள் அதிகளவாக கரை வலைகளுக்கு பிடிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறித்த பாரை மீன் ஒன்றின் பெறுமதி சுமார் 1,000 ரூபாய் முதல் 1,200 வரை விற்பனையாவதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களால் ஒரு மீனவரின் நாள் வருமானமாக 4 முதல் 5 இலட்சமாகவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில், கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறான பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.