கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட அதிரடிப்படையினர்!
கிளிநொச்சியில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் அங்கிருந்து பல லீற்றர் கசிப்பு, கோடா, உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் குளத்தின் கரையோர பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இயங்கிவந்துள்ளது.
குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று (24) அதிகாலை 2.00 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது, அவரிடமிருந்து 14 பெரல்களில் கசிப்பு உற்பத்திக்கு தயாரான நிலையில் காணப்பட்ட 1620 லீற்றர் கோடாவையும், கசிப்பு வடித்து கொண்டிருந்த 540 லீற்றர் கோடாவையும், வடித்த நிலையில் காணப்பட்ட 120 லீற்றர் கசிப்பும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்களையும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.

மேலும், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பெரிய குளம், கட்டைக்காட்டைச் சேர்ந்த 33 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபர் கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் பல பகுதிகளுக்கு கசிப்பை விநியோகித்து வந்தவர் என பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபரையும் மீட்கப்பட்ட கோடா, கசிப்பு, உபகரணம் என்பவற்றையும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளார்கள்.
