யாழ் காரைநகரில் 34 பேரால் சமூகத்திற்கு அபாயம்!
யாழ்ப்பாணம் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு வேளையில் நடத்தப்பட்ட திருமணத்தில் கலந்து கொண்ட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள சமப்பவம் அப்ப்குதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 15 வயதிற்குட்பட்ட 14 பேரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி காரைநகர் பகுதியில் , ஊரடங்கு அமுலில் உள்ள வேளை குறித்த திருமண நிகழ்வு நடைபெற்ற நிலையில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் அது தொடர்பிலான படங்களையும் சிலர் முகநூலில் பகிர்ந்திருந்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் திருமணத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தினர். அதேவேளை ஊரடங்கு அமுலில் உள்ள வேளை சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் நடாத்தப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்ய்யபப்ட்டுள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக கடந்த செவ்வாய்க்கிழமை திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் நேற்று இரவு வெளியான பரிசோதனை முடிவில் 34 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க முயன்ற போது . சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரை தாக்க முற்பட்டு அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 03 பேர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் திருமணத்தில் 39 வயது தாயார், அவரது 11,9,7 வயதுடைய ஆண் பிள்ளைகள், 41 வயதான தாயார் அவரது 20, 15 வயதுடைய பிள்ளைகள், இன்னொரு குடும்பத்தில் 14,13,12,9 வயதுடைய பிள்ளைகள், இன்னொரு குடும்பத்தில் 37 வயதான தாயார் 10,8,5 வயதான பிள்ளைகள், இன்னொரு குடும்பத்தில் 39 வயதான தாயும் 14 வயதான மகளும், பிற குடும்பங்களில் 7 வயது சிறுமி, 9 வயது சிறுவன், இன்னொரு குடும்பத்தில் வயோதிப தம்பதியும், அவர்களின் மகன், மருமகனுமே இவ்வாறு தொற்றிற்குள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.