ஜேர்மனியில் புகலிடம் கோரிய மேலும் பல இலங்கையர்கள் நாடுகடத்தல்!
ஜேர்மனியில் புகலிடம் கோரிய இலங்கை தமிழர்கள் பலர் நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராங்பேட் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சுமார் 20 தொடக்கம் 25 வரையான இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும், நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்த சரியான விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை. இந்நிலையில் நாடு கடத்தப்பட்டவர்கள் இன்று இலங்கையை வந்தடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஜேர்மனியில் புகலிடம் கோரிய 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், சுமார் மூன்று மாத கால இடைவெளியில் மேலும் பலர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவ்வாறான நாடு கடத்தப்படும் சம்பவங்கள் ஜேர்மனியில் இனியும் தொடரக் கூடும் என அங்கிருக்கும் சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். மேலும் நாடுகடத்தப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக பிராங்பேர்ட் விமான நிலையத்தில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.