மூடப்பட்டது பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
உரிய வகையில் எரிபொருள் கிடைக்காமையினால் பல எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் முதல் கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் டீசலை பெற்றுக்கொள்வதற்காக பலர் வரிசைகளில் காணப்படுவதாகவும் செய்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களைச் சூழவுள்ள வீதிகளில் எரிபொருளுக்காக பலர் வரிசைகளில் நிற்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இருந்து எரிபொருள் விநியோகம் வழமைபோல இடம்பெறுகிறது. எவ்வாறாயினும், கொலன்னாவ முனையத்திற்கு டீசல் இருப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக சென்ற பல தாங்கி ஊர்திகள் டீசல் கிடைக்காத காரணத்தினால் ஏற்கனவே கொலன்னாவ கஜபாபுர தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள பிரச்சினைக்கு வலுசக்தி அமைச்சரிடம் இருந்து உடனடி தீர்வை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்திய உதவியின் கீழ் மேலும் 3,500 மெட்ரிக் டன் டீசலுடனான கப்பலொன்று நாளைய தினம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.