இலங்கை அரசியல் அரங்கில் இம்மாத நிறைவில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள்!
இலங்கை அரசியல் அரங்கில் இம்மாத நிறைவில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசில் - அரசாங்கத்துக்கு வெளியில் - நாடாளுமன்றில் என பல மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.
அந்தவகையில் நீண்ட நாட்களாகக் கதை அடிபட்டு வரும் அமைச்சரவை மாற்றம் இதில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளில் இருந்து முதல் கட்டடமாகக் கிட்டத்தட்ட 28 பேர் அரசுடன் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரச வட்டாரம் தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) நெருக்கமானவர்களுக்குப் புதிய அமைச்சரவையில் பலமான அமைச்சுக்கள் வழங்கப்படவுள்ளன என்று அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஜோன்சன் பெர்னாண்டோ (Johnston Fernando), ரோஹித அபேகுணவர்த்தன (Rohitha Abeygunawardana) ஆகியோர் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்திருக்கின்றனர்.
அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்காவிட்டால் அவர்கள் எதிர்தரப்பில் இருந்து செயற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரியவருகின்றது.
ஜனாதிபதியின் திட்டம் தேசிய அரசை அமைப்பதுதான் என்றும், அதற்கான அழைப்பை அவர் எல்லாக் கட்சிகளுக்கும் உத்தியோகபூர்வமாக விடுக்கவுள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.