பசுமாட்டை விற்ற கணவன் ; மனைவியை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட கொடூரம்
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியில் இளம்பெண் தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில், அவரது கணவனே அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது அம்பலமாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அடுத்த மேல்முகம் கிராமத்தை சேர்ந்தவர் விசைத்தறி கூலி தொழிலாளியான 44 வயதுடைய கணவன் மற்றும் இவரது மனைவி 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
குடிப்பழக்கம் கொண்ட கணவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன், மனைவியிடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. அடுத்த நாள் வீட்டில் உள்ள அறையில் மனைவி தூக்கில் தொங்கியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பொலிசார், மனைவியின் சடலத்தை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று கணவன், மனைவியை கொன்றதாக கூறி பொலிஸில் சரணடைந்ததுடன் அதிர்ச்சி வாக்குமூலத்தையும் வழங்கியுள்ளார்.
தன் மனைவியுடன் தொடர்ந்து தகறாரில் ஈடுபட்டதுடன், வீட்டில் வளர்த்து வந்த பசுமாட்டையும், கன்றையும் விற்று விட்டேன். வீட்டில் மாடு இல்லாதது குறித்து கேட்டு மனைவி என்னுடன் சண்டையிட்டார். அப்போது, அவரை தாக்கினேன். அதன்பிறகு, துண்டால் அவரது கழுத்தை நெரித்ததில் அவர் இறந்து விட்டார். அவரை கொலை செய்ததை மறைப்பதற்காக, தூக்கில் தொங்க விட்டேன்.
ஆனால், எப்படியும் பொலிசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தால் சரணடைந்து விட்டேன் என அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த பொலிசார், திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.