இலங்கையில் வெளிநாட்டு பெண்ணிடம் கைவரிசையை காட்டிய நபருக்கு நேர்ந்த கதி!
பேருந்தில் பிரித்தானிய பெண்ணின் சூட்கேஸ் மற்றும் பணம் களவாடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் புறக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபரால் திருடப்பட்டதாகக் கூறப்படும் முறைப்பாட்டாளரின் மடிக்கணினி, கமரா, வங்கி அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டு என்பவற்றை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட மேலதிக நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரித்தானிய பெண் எல்ல நோக்கி செல்வதற்காக புறக்கோட்டை பெஸ்டியன் பேருந்து நிலையத்தில் பசறை பேருந்தில் ஏறி இருந்தபோது இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.