தமிழர் பகுதியில் வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் கொலை! 5 பேர் கைது
வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்றையதினம் (08-12-2024) தெரிவித்துள்ளனர்.
சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் கடந்த 01-12-2024 ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த 46 வயதான செல்வநிரோயன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்திருந்தார்.
இச் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த ஓமந்தைப் பொலிஸார் வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனச் சாரதியை அன்றைய தினமே கைது செய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸாரும், ஓமந்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வவுனியா, உக்குளாங்குளம், கூமாங்குளம், வேலங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 இளைஞர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்.
மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.