இலங்கையில் இருந்து சென்றவர் இந்தியாவில் கைது
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு சட்டவிரோதமாக சென்ற இளைஞரை கடலோர பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் இலங்கை அகதி ஒருவர் வந்திறங்கி இருப்பதாக மீனவர்கள் மூலம் கடலோர பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதை தொடர்ந்து கடலோர பொலிஸார் மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகு ஒன்றில் நடுக்கடல் மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த கிஷோகரன் என்ற கிஷோர்(31) என்பவரை மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
தொடர்ந்து மண்டபம் மறுவாழ்வு முகாமில் வைத்து கிஷோகரனிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
விசாரணையில் அவர் இலங்கையில் பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டு சிறை சென்றவர் என்றும் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக தமிழகம் வந்துள்ளதாகவும் மீண்டும் இலங்கை செல்ல முயற்சிகள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் பாஸ்போர்ட் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தனுஷ்கோடி பொலிஸார் நேற்று (22) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.