கழிவறையில் இருந்தபடி நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற நபர்; சம்பவத்தால் அதிர்ச்சி
இந்தியாவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, நபர் ஒருவர் கழிவறையில் இருந்து நேரடி ஒளிபரப்பில் ஆஜரான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காசோலை மோசடி தொடர்பான வழக்கு ஒன்றை குஜராத் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, முறைப்பாடு அளித்தவரான சமத் பேட்டரியை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்
அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதி நிர்சார் எஸ் தேசாய் அமர்வு முன்பு கடந்த ஜூன் 20ஆம் திகதி நேரடி ஒளிபரப்பு மூலம் சமத் பேட்டரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஆனால், அவர் கழிப்பறை இருக்கையில் அமர்ந்து தனது ஹெட்செட்டை அணிந்து கொண்டு ஆஜராகியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவில், அந்த நபர் தனது கையடக்க தொலைபேசியை தரையில் வைத்துக்கொண்டு தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்வதையும், எதிர்தரப்பில் நீதிமன்ற அறையில் சட்டத்தரணி தனது வாதங்களை முன்வைத்து வாதிடுவதையும் காண முடிகிறது.
இது தொடர்பான வீடியொ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக ஒருவர் செயல்படுவதற்கு பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.