சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஒருவர் கைது
அநுராதபுரம், மதவாச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வஹமல்கொல்லேவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேக நபர் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
மதவாச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வஹமல்கொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பேக்ஹோ இயந்திரம், உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.