கழிப்பறை குழி தோண்டி பொலிஸாரிடம் சிக்கிய நபர் ; மீட்கப்பட்ட பொருட்களால் ஷாக்
தொல்பொருள் மதிப்புமிக்கவை என கருதப்படும் சில பொருட்களுடன் நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் புல்மோட்டை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 54 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

மேலதிக விசாரணை
குறித்த சோதனையின் போது, சந்தேக நபர் மறைத்து வைத்திருந்த தொல்பொருள் மதிப்புடையதாக கருதப்படும் சிறிய செம்பு பாத்திரம், பட்டை தீட்டப்பட்ட வெளிப்படையான கல், இரத்தினக்கல் என சந்தேகிக்கப்படும் சாம்பல் நிற கல், இரத்தினக்கல் என சந்தேகிக்கப்படும் பழுப்பு நிற கல் மற்றும் 9 வெளிப்படையான கல் துண்டுகள் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனது வீட்டு கழிப்பறை குழி தோண்டும் போது கண்டெடுக்கப்பட்ட பாறை போன்ற கல் ஒன்றை உடைத்ததாகவும், அந்த பாறைக்குள் இருந்தே இந்த பொருட்கள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக சிறிபுர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சிறிபுர காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.