இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் ஆபத்தான நோய்; மக்களே அவதானம்!
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இன்று (8) தெரிவித்துள்ளார்.
அவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2 பேர் மலேரியா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
மலேரியா
ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இருவரிடத்திலேயே மலேரியா தொற்று காணப்படும் நிலையில், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நெடுந்தீவு மற்றும் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த குறித்த இருவரும் கடந்த வருடம், ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று நாடு திரும்பியுள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி நெடுந்தீவை வந்தடைந்தடைந்த 38 வயதான ஆண் ஒருவருக்கு மலேரியா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஏற்கனவே வேறு பல நோய்களுக்கு உட்பட்டிருந்த நிலையில், கடுமையான நடுக்கம் போன்ற அறிகுறிகளுடன் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடனடியா மாற்றப்பட்டிருந்தார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு மலேரியா ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
சிகிச்சைகளின் பின்னர் அவரது குருதியில் மலேரியா கிருமிகள் முற்றாக அழிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டாலும் அவருக்குக் காணப்பட்ட பல்வேறு நோய் நிலைகளால், அவர் சுய நினைவற்ற நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டோகா சென்று திரும்பிய இளைஞர்
மேலும் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவரும் டோகா நாட்டில் தங்கியிருந்து நாடு திரும்பிய நிலையில், அவருக்கும் மலேரியா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவருக்கு காய்ச்சலோ அல்லது வேறு எந்த நோய் அறிகுறிகளோ காணப்படவில்லை எனவும் யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை 2016 இல் உலக சுகாதார அமைப்பால் இலங்கை மலேரியா இல்லாத நாடாக சான்றிதழ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.