வட மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!
வடக்கில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் பொது மக்கள் இனி வரும் பண்டிகை நாட்களில் அவதானமாக நடந்துகொள்ளமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று (02) செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரு தினங்களில், தீபாவளி பண்டிகை வரவுள்ளதால், பொது மக்கள் சுகாதார முறைகளைப் பின்பற்றி செயற்பட வேண்டும். கடந்த புதுவருடத்தின் போது ஏற்பட்ட கொத்தணி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இதுவரை வடமாகாணத்தில் 38,850 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வட மாகாணத்தில் இதுவரை 833 கொரோனா இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடக்கில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
வட மாகாணத்தில் 30 வயதுக்கு மேல் 572,933 பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸையும் 491,201 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.
அதேபோல வட மாகாணத்தில் 20 – 30 வயதுக்குட்பட்டவர்களில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை 118,820 பேரும் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை 47,543 பேரும் பெற்றுள்ளனர்.
வட மாகாணத்தில் 16 – 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களில் 43,034 பைஸர் தடுப்பூசியை பெற்றுள்ளனர். அதேபோல 12-19 வயதுக்குட்பட்ட விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்களுக்குள்ளான 535 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
வட மாகாணத்தில் சுகாதார திணைக்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி () வழங்கும் பணி நாளை முதல் யாழ்.போதனா வைத்தியசாலையிலும், மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் ஆதார வைத்தியசாலைகளிலும் இடம்பெறும். சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்தும் பணி இடம்பெறும். வட மாகாணத்தில் பத்தாயிரம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி இடம்பெறவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.