பலஸ்தீனத்துடன் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு நெருக்கமான தொடர்பு உள்ளது
காஸாவில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கைக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதனால் இது தொடர்பில் நாடாளுமன்றமும், அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரில் வீதி
"பலஸ்தீனத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு நெருக்கமான தொடர்பு உள்ளது. அவர் இலங்கை பலஸ்தீன ஒற்றுமை சங்கத்தை ஆரம்பித்தார்.
அங்கு மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரில் வீதியொன்றும் அமைக்கப்பட்டது என்பதனை கூற வேண்டும். இந்தளவுக்கு உறவு உள்ளது. இந்நிலையில் அங்கே மீண்டும் ஏற்படும் யுத்தத்தால் இலங்கைக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்புகள் ஏற்படலாம்.
இது தொடர்பில்நாடாளுமன்றமும், அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும். இஸ்ரேல் காஸா மோதல் பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றன. இந்த யுத்தத்தால் உலகில் ஸ்தீரமற்ற நிலைமை ஏற்படும்.
இதனால் ஏற்படக் கூடிய பாதிப்பு நிலைமையில் இருந்து மீள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எதிர்காலத்திலாவது உலக நாடுகள் யுத்தத்தை தவிர்த்து இந்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடு என்றவகையில் இதனல் ஏற்படுகின்ற பாதிப்பு தொடர்பில் நாங்கள் நன்கு அனுபவப்பட்டிருக்கிறோம்.
அதனால் இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.