இறந்துவிட்டதாக தகனம் செய்த பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!
இறந்துவிட்டதாக தகனம் செய்த பெண் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
லக்னோவின் பி.கே.டி பகுதிக்கு உட்பட்ட நாவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி என்ற பெண், கடந்த 2024-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி திடீரென காணாமல் போனார்.

கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட எரிக்கப்பட்ட பெண் யார்?
அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2024 ஜூலை 16 அன்று ஐ.ஐ.எம் சாலைக்கு பின்புறம் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் இருந்து அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை காவல்துறை மீட்டது.
உடலை பார்வையிட்ட ஷிவானியின் குடும்பத்தினர், கையில் கட்டப்பட்டிருந்த காப்பு மற்றும் விரலில் இருந்த மோதிரத்தை வைத்து அது ஷிவானிதான் என அடையாளம் காட்டி மயானத்தில் தகனமும் செய்தனர்.
அத்துடன் ஷிவானியின் குடும்பத்தினர் அவருடைய கணவர் மற்றும் மாமனார் வீட்டினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஷிவானியை வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தி கொலை செய்து உடலை வீசிவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.
இதன் அடிப்படையில் காவல்துறை வரதட்சணைக் கொடுமை, கடத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது.
எனினும் உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் சோதனைகளின் ஒரு பகுதியாக டி.என்.ஏ மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில், தகனம் செய்யப்பட்ட உடலின் டி.என்.ஏ மாதிரியும், ஷிவானியின் பெற்றோரின் டி.என்.ஏ மாதிரியும் பொருந்தவில்லை.
இதனால், மீட்கப்பட்ட உடல் ஷிவானியுடையது அல்ல என்பது தெரியவந்ததை அடுத்து, வரதட்சணைக்கொடுமை பிரிவுகள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டன.
இந்நிலையில், காணாமல் போய் 27 மாதங்கள் கழித்து கடந்த சனிக்கிழமை அன்று ஷிவானி திடீரென தனது பெற்றோர் வீட்டிற்கு நேரில் வந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் காவல்துறையினரும் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஷிவானி பரா பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் கழிப்பறையை நிர்வகித்து வரும் ஜாவேத் என்பவருடன் தங்கியிருந்தது தெரியவந்தது. ஷிவானி உயிருடன் திரும்பியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதேவேளையில், லக்னோ காவல்துறைக்கு மற்றொரு பெரிய புதிர் எழுந்துள்ளது. ஷிவானி உயிருடன் இருக்கும் பட்சத்தில், கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட எரிக்கப்பட்ட பெண் யார், அவரைப் படுகொலை செய்தது யார் என்ற கோணத்தில் காவல்துறை தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.