உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியால் இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையில் எவ்வித குறைப்பையும் தற்போது எதிர்பார்க்க முடியாது என இலங்கை கனிமவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமாரக இதனைத் தெரிவித்தார்.
உலக சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்திற்கு முன்னர் காணப்பட்ட மட்டத்திற்கு இன்னும் குறைவடையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க மற்றும் ஈரான் ஜனாதிபதிகளுக்கு இடையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் எட்டப்பட்ட பூர்வாங்க அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து, உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நேற்றைய (22) நிலவரப்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.18 அமெரிக்க டொலராகவும், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.29 அமெரிக்க டொலராகவும் பதிவாகியிருந்தது.
உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்ததன் பயனை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் மலேசியா உள்ளிட்ட சில நாடுகள் ஏற்கனவே எரிபொருள் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
எனினும், தற்போதைய உலக சந்தை விலை நிலவரம் இலங்கையில் எரிபொருள் விலையை குறைப்பதற்கு போதுமானதாக இல்லை என இலங்கை கனிமவள கூட்டுத்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது.