வவுனியாவில் 3 இடங்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வாராய்ச்சி!
வவுனியாவில் உள்ள புதியகோவில் குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் ஆயுதங்கள் மற்றும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் இன்றைய தினம் (12-10-2023) வவுனியா நீதவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தனியார் காணியில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 இடங்களில் அகழ்வாராய்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது குறித்த காணி அமைந்துள்ள இடத்தில் புலிகள் அமைப்பின் முகாம் இருந்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணை ஆய்வக அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பூவரசங்குளம் பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இரு பேக்ஹோ இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தில் பல மணித்தியாலம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதும் ஆயுதங்களோ அல்லது வேறு எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தோண்டப்பட்ட இடங்களில் எதுவும் கிடைக்காததால், மீண்டும் தோண்டப்பட்ட இடங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு மாஜிஸ்திரேட் வாசிம் அகமது உத்தரவிட்டுள்ளார்.