விடுதலைப் புலிகள் தொடர்பில் இந்தியாவின் தீர்ப்பாயம்
விடுதலைப் புலிகளை ஏன் 'சட்டவிரோத அமைப்பாக' அறிவிக்கக் கூடாது? இதற்கான காரணங்களை விளக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு இந்திய தீர்ப்பாய அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் சட்ட விரோத செயல்களைத் தடுக்கும் சட்டத் தீர்ப்பாயம் கடந்த 14ஆம் திகதி இந்த அறிவிப்பை அனுப்பியுள்ளது.
கடந்த மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு இந்தியா நீட்டித்தது.
2009ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும் சர்வதேச மட்டத்தில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுதலைப் புலிகளின் சர்வதேசச் செயற்பாடுகள் இன்னமும் இந்தியாவின் இறையாண்மையைப் பாதிப்பதாக இந்திய மத்திய அரசின் சார்பில் மேற்கண்ட தீர்ப்பாயத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்குமாறு ஏற்கனவே இந்த தீர்ப்பாயத்தில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அவ்வாறு அறிவிக்குமாறு அதற்கான காரணங்களை தெரிவிக்குமாறு விடுதலைப் புலிகளிடம் தீர்ப்பாயம் கேட்டுள்ளது.
இதற்காக விடுதலைப் புலிகளுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீர்ப்பாயத்தின் அடுத்த அமர்வு ஜூலை 23ஆம் திகதி நடைபெறும் புலிகள் தங்கள் விளக்கத்தை அல்லது ஆட்சேபனையை வழக்கறிஞர் மூலம் பதிவு செய்யலாம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.