நாட்டின் நெருக்கடி நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் காரணம்; ஆசு மாரசிங்க
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் நாட்டை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற வரலாறு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஆசு மாரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் கூறுகையில்,
49 ட்ரில்லியன் பொருளாதார இழப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது நாட்டிற்கு ஏற்படுத்திய சேதத்திற்கு இணையாகவே, மக்கள் விடுதலை முன்னணி இந்த நாட்டின் பொருளாதாரத்தை 12 வருடங்கள் பின்னோக்கி கொண்டு சென்றவர்கள்.
மக்கள் விடுதலை முன்னணியினரால் சுமார் 49 ட்ரில்லியன் பொருளாதார இழப்பு நாட்டிற்கு ஏற்பட்டது. அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தின் போது இந்த நாட்டின் பொருளாதாரத்தை 30 வருடங்கள் பின்னடைய செய்தவர்கள் என்றும் ஆசு மாரசிங்க கூறினார்.
எனவே நாட்டில் ஆட்சி பீடத்திற்கு ஆசைப்படுபவர்கள் முதலில் நாட்டு மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என தெரிவித்த அவர், மக்கள் இழந்ததை மீளப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதன்பின்னரே ஆட்சியை கோர வேண்டும் என தெரிவித்த ஆசு மாரசிங்க, இதனைவிடுத்து வெறுமனே ஆட்சியைக் கோருவதனால் மக்கள் ஆணை கிடைக்கப்போவதில்லை என்றும் இதன்போது தெரிவித்தார்.