வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்களுக்கு பூட்டு!
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் அத்தியாவசியமான இராணுவ முகாம்களை தவிர்த்து ஏனையவற்றை மூடுவதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
அத்துடன், இராணுவ வசமுள்ள காணிகள் முறையான மீளாய்வுகளுடன் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) உரையாற்றுகையிலேயே அவர் இதை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களும், பெருந்தோட்ட மக்களும் அரசாங்கத்துக்கு விசேட ஆணை வழங்கியுள்ளார்கள்.
ஆகவே அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்தே செயற்படுகிறோம். தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.
இயற்கை அனர்த்தம் ஏற்பட்டாலும் இராணுவத்தையே அழைக்கிறோம். ஆகவே முப்படையின் சேவையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது என்றார்.