அதிகாலையில் பெரும் துயரம்; பற்றி எரிந்த வீட்டில் பறிபோன உயிர்கள்!
குடும்ப தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் தந்தையும் மகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியில் இன்று (06) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குடும்ப தகராறு
சம்பவத்தில் 43 வயதுடைய தந்தையும் 13 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய 36 வயதுடைய மனைவி, 15 வயதுடைய மகள், 20 வயதுடைய மகன் மற்றும் 66 வயதுடைய பாட்டி ஆகியோர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தந்தை வீட்டிற்கு தீ வைத்தபோது இரண்டு மகள்கள், மனைவி மற்றும் மனைவியின் தாய் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். சம்பவத்தைக் கேள்விப்பட்டு 20 வயதுடைய மகன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், தனது தாய் மற்றும் சகோதரிகளை மீட்க முயன்றபோது, 20 வயதுடைய மகனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியைத் தாக்கி வந்ததாகவும், அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறுகள் காரணமாக, கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் பலமுறை முறைப்பாடு அளிக்கப்பட்டு, இரு தரப்பினரும் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.