எரிவாயு விலை அதிகரிப்பின் காரணம் குறித்து லிட்ரோ எரிவாயு நிறுவனம் அதிர்ச்சி தகவல்
12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரினால் லிட்ரோ நிறுவனம் தற்போது 2,000 ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே(Pial Colombahettike) இதனைத் தெரிவித்துள்ளார்.
"12.5 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டருக்கு நிகர இழப்பு 2,000 ரூபாய். அதுதான் இன்றைய நிலை. அதிகரிக்கும் ஒவ்வொரு டொலருக்கும் எரிவாயு சிலிண்டரின் செலவு 12.50 ரூபாய் அதிகரிக்கிறது."
" மார்ச் ஒப்பந்த அடிப்படையில் நாங்கள் மற்றொரு எரிவாயு கப்பலை வாங்கினால் அது லிட்ரோ நிறுவனத்தின் இறுதி பயணமாகும்." "லிட்ரோ நிறுவனம் இந்த விலையின் கீழ் இயங்கினால் இன்னும் மூன்று மாதங்கள் செயற்படமுடியாது. விலையை அதிகரிக்க வேண்டும்.
டொலர் 300 ரூபாய்க்குள் உள்ளது. தற்போது ஒரு எரிவாயு சிலிண்டருக்கான செலவு 4,462.25 ரூபாய் ஆகும்." "தற்போது ஒரு கப்பலுக்கு சுமார் 18 இலட்சம் ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்தி வருகிறோம்.
இதை 200 மில்லியன் ரூபாய் நஷ்டத்தில் விற்று அடுத்த கப்பலை எப்படி வாங்குவது?" என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.